பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், இரட்டைமலை சீனிவாசன் நகரில் அரசுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை தனி நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டு காலமாக ஆக்கரமித்து, பண்ணை வீடு உள்பட 11 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு, வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. ஆக்கிரமிப்பாளாரின் பிடியில் இருக்கும் அரசு நிலத்தை மீட்க பல்லாவரம் தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், நேற்று பல்லாவரம் தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர் ஆக்கிரமிக்கப்பட்ட பண்ணை வீடு உள்பட 11 வீடுகளை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கட்டிடங்களை அகற்றி தரைமட்டமாக்கினர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ40 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, அசம்பாவித சம்பவங்களை தடுக்க சங்கர் நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.