கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி மதி கடந்த 13ம்தேதி மர்மமான முறையில் இறந்தார். அவர் விடுதி மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே மாணவியின் இறப்புக்கு நீதிகேட்டு மாணவர்கள், இளைஞர்கள் கடந்த 17ம்தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது கலவரமாக வெடித்தது. பள்ளி கட்டிம் தீக்கிரையாக்கப்பட்டது. வாகனங்கள், காவல்துறை வேன் எரிக்கப்பட்டன. பள்ளியில் உள்ள மாணவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து பள்ளி மூடப்பட்டு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே வருகிற 24ம்தேதி தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடக்கிறது. இதையொட்டி சின்னசேலம் கணியாமூர் தனியார் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 1200 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதற்கிடையே கலவரத்தில் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு நடக்க இருந்த தேர்வை வேறு பள்ளிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர், டிஎன்பிஎஸ்சி சேர்மனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி கணியாமூர் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத இருந்த 1200 தேர்வர்களுக்கும் ஏகேடி பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு அங்குள்ள 60 அறைகளில் அவர்கள்தேர்வுஎழுத ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.