சென்னை: நரசிம்ம பிரமோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம பிரமோற்சவத்தின் பிரதான நாளான நேற்று காலை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோயிலில் யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரமோற்சவம், 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாள் கருடசேவை உற்சவம் விமர்சையாகவும் ஐந்தாம் நாள் விழாவில் பல்லக்கு நாச்சியார் திருக்கோல புறப்பாடும், அதை தொடர்ந்து யோக நரசிம்மர் கோலத்தில் உற்சவர் புறப்பாடும், 11ம் தேதி இரவு அனுமந்த வாகன புறப்பாடும், விழாவின் ஆறாம் நாளான நேற்று காலை சூர்ணாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க சப்பர புறப்பாடும் மற்றும் காலை 9.30 மணிக்கு ஏகாந்தசேவையும், இரவு யானை வாகன புறப்பாடும் நடந்தது. நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வடம் பிடித்து தேர் இழுத்தனர். இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடந்தது.