×

ரூ.152 கோடியில் கல்விசார் கட்டிடங்கள் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்து, உயர்கல்வித் துறையின் சார்பில் 152.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உயர்கல்வியினை அனைவரும் பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும், கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இலவச கல்வித் திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. 2021-22ம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும். விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் - தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் - மானூர், திருப்பூர் மாவட்டம் - தாராபுரம், தர்மபுரி மாவட்டம் - ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் - கூத்தாநல்லூர், வேலூர் மாவட்டம் - சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேபோன்று, 2022-23ம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, திருச்சி மாவட்டம் - மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் - தளி, புதுக்கோட்டை மாவட்டம் - திருமயம், ஈரோடு மாவட்டம் - அந்தியூர், கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் - திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் - ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் - வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் - பெரும்புதூர் ஆகிய இடங்களில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, புதியதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-23ம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பெற்று பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டிடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டிடங்கள்;

சென்னை மாவட்டம், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடங்கள்; சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டிடம்; சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் 7 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம் என மொத்தம் 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, மு.பெ.சாமிநாதன், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் க.லட்சுமிபிரியா, கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோகன், தங்கபாண்டியன், எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin , Academic Buildings, 20 New Government Arts, Science Colleges, Chief MinisterM.K.Stalin
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து