×

நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-23ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் 17ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள்  தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வு என்ற சமூக அநீதியின் பாதிப்புகள் இன்னும் விலகவில்லை.

நீட் தேர்வு குறித்த அச்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் மனங்களில் இருந்து இன்னும் அகலவில்லை என்பதையே மாணவர் தனுஷின் தற்கொலை காட்டுகிறது. நீட் தேர்வால் கடந்த 2020ம் ஆண்டில்  15 பேர் தற்கொலை செய்து கொண்டனர்; கடந்த ஆண்டில் 8 பேர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். நடப்பாண்டிலும் இது தொடர்கதையாகி விடக் கூடாது.  நடப்பாண்டில் தனுஷின் தற்கொலை தான் முதலும், கடைசியுமானதாக இருக்க வேண்டும். தற்கொலைகள் தொடர அனுமதிக்கக் கூடாது.

 நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதன் மூலம் தான் மாணவர்களின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நீட் விலக்கு சட்டம் ஆளுனர் மாளிகையை கடப்பதற்கே மொத்தம் 234 நாட்கள் ஆயின. அதன்பின்   மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 60 நாட்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த 50 நாட்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை அரசு வெளியிட்டாக வேண்டும். 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றால், அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.

அமைச்சர்கள் குழு அல்லது அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கு அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Anbumani , Anbumani insisted to get exemption for NEET exam
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...