மாமல்லபுரம்: ஒன்றிய சமூக நீதி, அதிகாரமளித்தலுக்கான துறை, கப்பல் போக்குவரத்துத்துறை மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் யோகா நிகழ்ச்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடந்தது. இதில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், யோகா பயிற்சியாளர்கள், யோகா கலைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஒரு சிறுமி உடலை வளைத்து யோகா செய்து காட்டினார். இதைபார்த்து ஆச்சரியமடைந்த ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசாமி, சிறுமியை பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில், பாஜ தலைவர் அண்ணாமலை பேசுகையில்,”யோகா செய்யும்போது உடலும் மனதும் ஆரோக்கியம் பெறும். யோகா பயிற்சியை தொடர்ந்து செய்வதால் எந்த நோயும் நம்மிடம் வர பயப்படும். இந்தியாவில் மொத்தம் 75 ஆயிரம் இடங்களில் யோகா நிகழ்ச்சி நடக்கிறது” என்றார்.