ஆலூர்: மத்திய பிரதேச அணியுடனான ரஞ்சி கோப்பை அரையிறுதியில், பெங்கால் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற போராடுகிறது. கர்நாடகா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மத்திய பிரதேசம் முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஹிமான்ஷு மந்த்ரி 134, புனீத் 9 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். புனீத் 33 ரன்னில் ஆட்டமிழக்க, இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹிமான்ஷு 165 ரன் (327 பந்து, 19 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக, ம.பி. முதல் இன்னிங்சில் 341 ரன் குவித்து ஆல் அவுட்டானது (105.3 ஓவர்). பெங்கால் தரப்பில் முகேஷ் குமார் 4, ஷாபாஸ் அகமது 3, ஆகாஷ் தீப் 2, பிரமானிக் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திணறியது. ஸ்பின்னர் கார்த்திகேயா வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக், கராமி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அனுஸ்துப் 4, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 22, போரெல் 9 ரன்னில் அணிவகுக்க, பெங்கால் 15.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த நிலையில் மனோஜ் திவாரி - ஷாபாஸ் அகமது ஜோடி பொறுப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரை சதம் கடந்தனர். 2ம் நாள் முடிவில் பெங்கால் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்துள்ளது.
திவாரி 84 ரன், ஷாபாஸ் 72 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ம.பி. பந்துவீச்சில் கார்த்திகேயா, புனீத் தலா 2, சரன்ஷ் ஜெயின் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க, 144 ரன் பின்தங்கியிருக்கும் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற இன்று போராட்டத்தை தொடர்கிறது.மும்பை ரன் குவிப்பு பெங்களூருவில் நடக்கும் 2வது அரையிறுதியில் மும்பை - உத்தர பிரதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உ.பி. அணி முதலில் பந்துவீச, மும்பை முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் சேர்த்திருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக 2ம் நாள் ஆட்டம் மிகவும் தாமதமாக மதிய உணவு இடைவேளைக்கு பிறகே தொடங்கியது.
ஹர்திக் தமோர் 51 ரன், ஷாம்ஸ் முலானி 10 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் 6 வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்து அசத்திதனர். ஷாம்ஸ் 50 ரன், தமோர் 115 ரன்னில் ஆட்டமிழக்க, மும்பையின் முதல் இன்னிங்சில் 393 ரன் குவித்து ஆல் அவுட்டானது (140.4 ஓவர்). உ.பி. தரப்பில் கரண் ஷர்மா 4, சவுரப் குமார் 3, யாஷ் தயாள் 2, மாவி 1 விக்கெட் எடுத்தனர்.அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய உ.பி. 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன் எடுத்துள்ளது. சமர்த் சிங் 0, பிரியம் கர்க் 3 ரன்னில் வெளியேறினர். மாதவ் 11, கேப்டன் கரண் ஷர்மா 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.