பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் சிறுவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரி வீதியில் வின்ச், தெற்கு கிரி வீதியில் ரோப்கார் இயக்கப்படுகிறது. ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம். 1 மணி நேரத்தில் சுமார் 400 பக்தர்கள் பயணிக்கலாம்.
இந்த ரோப்காரில் தற்போது வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ரோப்கார் பெட்டிகள் பழுது நீக்குதல், புதிய இரும்பு கயிறு பொருத்துதல், ஷாப்ட் இயந்திரம் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக நாளை (ஜூன் 16) முதல் ஜூலை 30ம் தேதி வரை சுமார் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படும், பக்தர்கள் வின்ச் மற்றும் படிப்பாதையை பயன்படுத்துமாறு பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.