சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 2,042 கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை 157 கோயில்களில் குடமுழுக்கு முடிந்துள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக கோயிலை தொல்லியல் வல்லுநர் நேரில் ஆய்வு செய்து 100 மற்றும் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான கோயிலா அல்லது கட்டப்பட்ட கோயிலா என்பதை கண்டறிந்து பழமை வாய்ந்த தொன்மையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாநில அளவிலான வல்லுநர் குழு கடந்த ஓராண்டில் தஞ்சாவூரில் 141 கோயில்கள், திருச்சி 137, நாகப்பட்டினம் 137, கடலூர் 131, திருப்பூர் 129, விழுப்புரம் 118, ஈரோடு 112, மயிலாடுதுறை 108 , சென்னை-2 103 கோயில்கள், தூத்துக்குடி 102, திருநெல்வேலி 92 , சேலம் 91 , வேலூர் 89 , திருவண்ணாமலை 88, காஞ்சிபுரம் 85, சென்னை-1 82 கோயில்கள், சிவகங்கை 81 , கோவை 81 , மதுரை 76 , திண்டுக்கல் 59 கோயில்கள் உட்பட்ட 20 மண்டலங்களில் 2,042 கோயில்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகளை பரிசீலித்து ஆலோசனைகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் இதுவரை 157 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.