நாகர்கோவில்: ஆரல்வாய்மொழியில் நேற்று நடந்த மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்ட தேசிய நன்றி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ேபாப்பின் இந்திய தூதர், பிஷப்புகள், அமைச்சர்கள் உட்பட லட்சம் பேர் கலந்துகொண்டனர்.மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த மே 15ம் தேதி வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்ட தேசிய நன்றி கொண்டாட்டம் ஆரல்வாய்மொழி, காற்றாடிமலையில் நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆன்றோர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து போப் பிரான்சிஸ் தேவசகாயத்தை புனிதராக அறிவித்த நிகழ்வு திரையில் காண்பிக்கப்பட ‘‘நம்பிக்கையில் உறுதி, வாழ்வில் சமத்துவம்’’ என்ற பெயருடன் ஆடம்பர நன்றி திருப்பலி நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் போப்பின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி, கோட்டார் பிஷப் நசரேன் சூசை மற்றும் பிஷப்புகள் பங்கேற்ற வருகை பவனி நடைபெற்றது. புனிதர் தேவசகாயம் படத்தை போப்பின் இந்திய தூதர் திறந்து வைத்தார். விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோதங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகள், எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஞானதிரவியம், எம்.எல்.ஏக்கள் தளவாய்சுந்தரம், பிரின்ஸ், ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.