திருவனந்தபுரம்: விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் திருவனந்தபுரம் அருகே உள்ள கீழாரூர் பகுதியில் கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமின் கடைசி நாளான 22ம் தேதி 200க்கும் மேற்பட்ட பெண் தொண்டர்கள் கலந்து கொண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் முன்வரிசையில் சென்ற 4 பெண்கள் வாள் ஏந்தி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பொது இடங்களில் ஆயுதத்துடன் ஊர்வலம் நடத்தியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பாப்புலர் பிரண்ட் அமைப்பின் சார்பில் திருவனந்தபுரம் ஆரியங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பேரணியில் கலந்து கொண்ட விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.