×

சுத்தமல்லி பஸ்நிறுத்தம் அருகே உயிருக்கு போராடியவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார்

பேட்டை: நெல்லையை அடுத்த சுத்தமல்லி விலக்கு பஸ்நிறுத்தம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் பசியால் மயங்கி கிடப்பதாக சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு முதலுதவிகள் செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்ற நிலையில் அப்பகுதியில் செல்வோரிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததாகவும் சுத்தமல்லியைச் சேர்ந்த முத்துவேல் மகன் தங்கவேல் (50) என்பதும் தெரியவந்தது. உறவினர்கள் யாரும் ஆதரவு இல்லாத நிலையில் சாலையோரங்களில் தங்கி வாழ்ந்து வந்த அவர் நோய் தாக்கம் அதிகரித்ததால் இரண்டு நாட்களாக சாப்பிடக்கூட முடியாமல் சுத்தமல்லி பஸ்நிறுத்தம் அருகே சுருண்டு விழுந்து கிடந்துள்ளார்.

அவரை மீட்டு முதலுதவிகள் செய்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சுத்தமல்லி போலீசாரைபொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : Chuttamalli , Police rescue a man who was fighting for his life near the Chuttamalli bus stand
× RELATED விடாமுயற்சியால் பேராசிரியராகிய சுத்தமல்லி காவல் நிலைய காவலர்