பேட்டை : நெல்லை பேட்டை மலையாளமேட்டைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் அரவிந்த்பெருமாள்(34). இவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பேச்சியம்மாள்(33) என்ற மனைவியும் லோகஸ்ரீமாரி(10) என்ற மகளும், சிவபாலா(4) என்ற மகனும் உள்ளனர். லோக ஸ்ரீமாரி 4ம் வகுப்பு படித்து வருகிறார். பேச்சியம்மாள் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
அரவிந்த் பெருமாள் எம்.பில் பொருளாதாரம் படித்துக் கொண்டிருக்கும்போது 2011ம் ஆண்டு கிரேடு-2 போலீஸ் கான்ஸ்டபிளாக தேர்வு பெற்றார். 2021ம் ஆண்டு கிரேட்-1 கான்ஸ்டபிளாக பதவி உயர்வு பெற்றார். தற்போது சுத்தமல்லி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வரும் அவர், பல்வேறு போராட்டங்களுக்கு இடையே பிஎச்டி முடித்து யுஜிசி நேர்முக, எழுத்துத்தேர்வு, டெமோ கிளாஸ், இன்டர்வியூ போன்றவற்றில் தேர்ச்சி பெற்று பேராசிரியராக தேர்வாகியுள்ளார்.
கடலோர பாதுகாப்பு துறை டிஐஜியாக பணிபுரியும் சின்னசாமியின் உதவியால் பிஎச்டி படித்ததனை நினைவுகூறும் அவர், தனது வாழ்நாளில் எப்படியாவது பேராசிரியராகி மாணவர்களுக்கு அவர்கள் எண்ணங்கள் ஈடேறும் வகையில் தன்னாலான உதவிகளை செய்ய வேண்டும் என்ற அவரது குறிக்கோளை அடைய இலக்காக காவல்துறையினரின் ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.
அவரை மாவட்ட எஸ்பி சரவணன் வாழ்த்தி காவல் துறையிலிருந்து விடுவித்து பேராசிரியராக பணியாற்றிட வழியனுப்பி வைத்தார். சுத்தமல்லி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், எஸ்ஐ மார்க்ரெட் திரேஷா மற்றும் போலீசார் அவருக்கு பிரிவுபசார விழா நடத்தி வாழ்த்தினர். விடாமுயற்சியுடன் கொண்ட குறிக்கோளை வென்றெடுத்த அரவிந்த் பெருமாளை பொதுமக்கள் பாராட்டினர்.