கன்னியாகுமரி : குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி பஸ் நிலையத்துக்குள் செல்ல பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது கோவளம் - கன்னியாகுமரி சாலையில் வேகமாக வந்த பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக பஸ் மீது பலமாக மோதியது.
அந்த பைக்கில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். பைக் மோதிய வேகத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். மேலும் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர்கள் சாமிதோப்பை சேர்ந்த சொரிமுத்து மகன் தேவ ஜாஸ்பர் (20) மற்றும் சாமிதோப்பு அருகே வடக்கு கரும்பாட்டூரை சேர்ந்த துரை மகன் ஷைஜின்(20) என்பது தெரிய வந்தது.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர், தென்தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த டேனியல் ஜெயராஜ் மகன் பிரவீன் (18) எனவும் தெரிகிறது. இதில் தேவ ஜாஸ்பர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். ஷைஜின் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்
றனர்.