×

சிறப்பாக செயல்பட்டதற்காக ஒன்றிய அரசு வழங்கிய விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற 12 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள்..!

சென்னை: தேசிய அளவில் சிறப்பாக செயல்புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசின் விருது வழங்கப்பட்டது. விருதுகளை பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் வாழ்த்துப் பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கிராம, வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகளைத் தேர்வு செய்து ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில் மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளை (Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar ) திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கும்; ஊராட்சி ஒன்றியங்களான விருதுகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த மண்ணச்சநல்லூர்  ஊராட்சி   ஒன்றியம், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மண்டபம் ஊராட்சி  ஒன்றியம்; கிராம ஊராட்சிகளான விருதுகள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அக்கரைப்பட்டி கிராம ஊராட்சி, கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த   மண்மங்கலம் கிராம ஊராட்சி, மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த சின்னப்பட்டி கிராம ஊராட்சி, கன்னியாகுமரி மாவட்டம்,

இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த கங்கலேரி கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், கரம்பகுடி ஊராட்சி ஒன்றியத்தைச்  சார்ந்த கட்டாத்தி கிராம ஊராட்சி ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கிராம சபைக்கான தேசிய விருது இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சாத்தனூர் கிராம ஊராட்சிக்கும்; கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கான (VPDP) தேசிய விருது சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த துவார் கிராம ஊராட்சிக்கும்; குழந்தைகள் நேய கிராம ஊராட்சிகான விருது நீலகிரி மாவட்டம்,

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய விருது பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாராட்டி, இது போன்று சிறப்பாக செயல்பட்டு மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. கேஆர். பெரியகருப்பன்,  தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் திரு.பிரவீன் பி.நாயர் இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Union Government Awards ,Chief Minister ,Stalin , 12 Panchayat Union Leaders who presented the awards presented by the Union Government for outstanding performance to Chief Minister Stalin and congratulated him ..!
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...