சென்னை: அதிமுக ஆட்சியில் அத்திவரதர் சிறப்பு தரிசனத்துக்கு தனியாக டிக்கெட் அச்சடித்து விநியோகித்துள்ளனர். இது விரைவில் அம்பலத்துக்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன்(அதிமுக) பேசியதாவது: சீன அதிபர் மாமல்லபுரம் வருகை, காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் ஆகியவை சிறப்பாக நடந்தது. எந்தவித சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆட்சியில் தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாங்கி 11 பக்தர்கள் இறந்தார்கள். மதுரை சித்திரை திருவிழாவில் இரண்டு பேர் இறப்பு...
அமைச்சர் சேகர்பாபு: அத்திவரதர் வைபவம் சிறப்பாக நடந்ததாக கூறினார். நான் ஒன்றை அவரது நினைவுக்கு கொண்டு வருகிறேன். 4 பக்தர்கள் மரணித்ததும் அந்த அத்திவரதர் வைபவத்தில் தான். அந்த அத்திவரதர் வைபவத்துக்கு தனியாக சிறப்பு தரிசனத்துக்கு டிக்கெட் அச்சடித்து விற்பனை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. வெகு விரைவில் அது அம்பலத்துக்கு வரும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.