சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 8ம் தேதி கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து பல்வேறு சேவை துறைகளுடன் ஆலோசனை கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் கூறியதாவது: சென்னையில் தகுதியுள்ள நபர்களில் 99 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 84 சதவீத நபர்களுக்கு 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
வரும் 8ம் தேதி சென்னையில் 3,300 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தப்பட உள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள நினைவூட்டல் சீட்டு வழங்கப்பட உள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாமிற்காக 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு, வார்டிற்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்களும், மீதமுள்ள 1,400 குழுக்கள் 3,100 இடங்களில்மக்கள் தேவையின் அடிப்படையில் முகாம் அமைக்கப்படும். இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.