திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீர்த்தம், வேதமலை என அழைக்கப்படும் மிகப் பழமையானதும், மக்களிடையே புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது சிவாலயங்களில் முக்கிய தலமாக விளங்குவதால், வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து வேதகிரீஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாள் சித்திரை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிகாலை 5.30 மணியளவில் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் 11 நாள் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் ஓம் நமசிவாய என்ற கோஷத்துடன் தரிசித்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சித்திரை திருவிழாவின் 3ம் நாளான 7ம் தேதி அறுபத்துமூவர் உற்சவமும், 7ம் நாளான 11ம் தேதி பெரிய தேர் உற்சவமும் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறுகிறது.