×

சென்னிமலையில் பயங்கரம் வீட்டில் தூங்கிய விவசாயி கடப்பாறையால் அடித்து கொலை: கழுத்தறுக்கப்பட்ட மனைவி கவலைக்கிடம் 27 பவுன் நகை, பணம் கொள்ளை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு புதூரை சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (62). இவர்களது 2 மகள், ஒரு மகன் திருமணமாகி சென்றுவிட்டனர். வயதான தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டு வாசலில் கட்டில்களில் தூங்கி கொண்டிருந்தனர்.

இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் துரைசாமியை கத்தி, கடப்பாறையை கொண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். தொடர்ந்து ஜெயமணியின் கழுத்தை அறுத்துள்ளனர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அதன்பின், கொள்ளையர்கள் வீட்டை திறந்து பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தையும், ஜெயமணி கழுத்தில் இருந்த தாலி கொடி, துரைசாமி அணிந்திருந்த மோதிரம் என மொத்தம் 27 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.

நேற்று அதிகாலை துரைசாமி வீட்டிற்கு வந்த பால்காரர் வாசலில் துரைசாமி கொலை செய்யப்பட்டிருப்பதையும், ஜெயமணி உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கூச்சலிட்டுள்ளார். தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் வந்து ஜெயமணியை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கவலைக்கிடமாக உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



Tags : Chennimalai terror attack , Chennimalai, granjero, asesinato, robo
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...