×

தண்டராம்பட்டு அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு-அண்ணாமலையார் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கிய தகவல்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி அருகே ஆண்டாப்பட்டு கிராமத்தில், ஒரு விவசாய விளை நிலத்தில் உள்ள கற்பாறையில் கல்வெட்டு எழுத்துக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில்,  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தணடராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும்,  உயரமான கற்பாறையில் சுமார் 10 அடி நீளத்தில் இந்த கல்வெட்டு அமைந்திருந்தது. அதில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில், அவை 13ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டது தெரியவந்தது.  எனவே, அவற்றை படியெடுத்து ஆய்வுக்காக அனுப்பினர். அதனை ஆய்வு செய்த  கல்வெட்டியல்துறை ஆய்வாளர் சு.ராஜாகோபால் கூறியதாவது:
ஆண்டாப்பட்டு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு, 13ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. அதில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கியது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீவல்லப பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள மெய்குன்றநாடு மற்றும் நரிப்பள்ளிநாடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை உடைய  நாயனார்க்கு அதாவது, அண்ணாமலையாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தேவதானமான ஆண்டார்பட்டு நிலம் நெடுநாட்களாக புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை கோயில் பணியாளரான கண்ணாரமுதப் பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன்மல்லப்பனுக்கு பெருமாளும் மல்லப்பதென்னாயக்கரும் கோயில் தானத்தாரும் அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததைப் பற்றிய செய்திகள் இக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த கல்வெட்டில் தற்போது ஆண்டாப்பட்டு என்று அழைக்கப்படும் ஊரின் பெயர் ஆண்டார்பட்டு என்று குறிப்பிட்டிருப்பதையும் அறிய முடிகிறது. இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலதுபுறம் சூரியன், சந்திரன் இதனுடன் திருவண்ணாமலை மலையை குறிக்கும் முக்கோண குறியீடு ஆகியவையும் வெட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற மலையைக் குறிக்கும் முக்கோண குறியீடு கொண்ட கல்வெட்டுகள் திருவண்ணாமலையைச் சுற்றி 60க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஏற்கனவே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வெட்டு தகவல் மூலம் திருவண்ணாமலை கோயில் வழிபாட்டுக்கும், வளர்ச்சிக்கும் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நிலம் தானமாக வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thandarambattu ,Annamalaiyar Temple , Thiruvannamalai: An agricultural crop in Andapattu village near Thanipadi, Thandarambattu taluka, Thiruvannamalai district.
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...