ஆம்பூர் : ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் புகுந்த மர்ம ஆசாமிகள் நகை, பணம் மற்றும் பொருட்கள் திருடிச்சென்றுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சாய்பாபா கோயில் தெருவில் வசிப்பவர் அனுமுத்து(35), இவர் திருப்பத்தூர் அடுத்த பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். வீட்ைட திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 சவரன் நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இவரது எதிர் வீட்டில் இளவரசன் என்பவரின் அக்கா வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த அவர் பார்த்தபோது பீரோவில் இருந்த 1 சவரன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது.
அதேபோல், ஜவஹர்லால் நேரு நகர் தண்ணீர் டேங்க் எதிரே சமையல் மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு துணிகள் கலைத்து வீசப்பட்டிருந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. மேலும், சாய்பாபா நகர் குறுக்கு தெருவில் உள்ள வீட்டிலும் மர்ம ஆசாமிகள் நுழைந்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நடந்துள்ள திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.