சென்னை: சென்னை ராயபுரத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
ஒரு மாணவனிடம் இருந்து அவரது திறமைகளை ஆசிரியர்கள் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். மாணவ பருவம் என்பது கள்ளங்கபடம் இல்லாமல் வாழக்கூடியது. பள்ளி மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து, வாழ்வில் உயரவேண்டும். பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிசெல்வதை மாணவர்கள் பேஷனாக கருதுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை நானே பலமுறை பார்த்து கண்டித்துள்ளேன். பேருந்து படிக்கட்டு பயணம் எத்தகைய ஆபத்து என்பதை பெற்றோரும் அறிவுறுத்த வேண்டும்.
இத்தகைய மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களுக்கு ஆசிரியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்து சொல்லவேண்டும். பல்வேறு வகைகளில் ஆசிரியர்கள் கண்டிக்கும்போது, அவர்கள் மீது மாணவர்கள் கோபப்பட்டு மோதல் ஏற்படுவதை தடுக்கவும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கவும் சைக்காலஜி கவுன்சலிங் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.