சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், தமிழக காவல் துறைக்கு 444 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிட்டுள்ளது. உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்று (7ம் தேதி) கடைசி நாளாகும். இந்நிலையில் காவல் துறையில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கும் போது, தங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், பல காவலர்கள் குறித்த நேரத்தில் தங்களது மேலதிகாரிகளிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், விண்ணப்பிக்க இயலாத நிலையில் சிரமப்படுகின்றனர். எனவே, காவலர்கள் உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும். குறித்த காலத்திற்குள் தடையில்லாச் சான்றிதழைப் பெற இயலாத தகுதியுள்ள காவலர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துவிட்டு, தடையில்லாச் சான்றிதழை நேர்காணலின் போது சமர்ப்பிக்கும் வகையில் அனுமதிக்க தேவையான அறிவுரையை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு வழங்க வேண்டும்.