மரக்காணம் : மரக்காணத்தில் போலி சான்றிதழ், போலி அரசு முத்திரை தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான இடைத்தரகரை தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது நண்பர்களான பாலு, சையத் அமித் ஆகியோர் மரக்காணத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு இடைத்தரகராக செயல்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் சான்றிதழை வழங்குவதற்கு பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலியாக சான்றிதழை வழங்கி வந்ததாகவும், மேலும் போலியாக கையெழுத்து மற்றும் அரசு முத்திரைகளை பயன்படுத்தியதாகவும் மரக்காணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் அய்யானாரிடம் விசாரணை செய்ததில் நண்பர்கள் பாலு மற்றும் சையத் அமித் ஆகியோருடன் சேர்ந்து போலியாக பத்திரம் மற்றும் சான்றிதழ்கள் அரசு முத்திரை தயாரித்து பொதுமக்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அய்யனார், பாலுவை மரக்காணம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான இடைத்தரகர் சையத் அமித்தை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மரக்காணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பிறப்பு-இறப்பு பதிவேடு புத்தகத்தை இவர்கள் 3 பேரும் திருடி சென்று கடந்த 1923 ம் ஆண்டு முதல் பிறந்தவர், இறந்தவர்களுக்கான சான்றிதழை பணத்தை பெற்றுக்கொண்டு போலியாக விற்பனை செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் மரக்காணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.