விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் கூட்டு பலாத்கார வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.விருதுநகர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஹரிஹரன், மாடசாமி, ஜூனத் அகமது, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று முன்தினம் சட்டசபையில் அறிவித்து, விசாரணையை தமிழக டிஜிபி நேரடியாக கண்காணிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் வினோதினியும், சிறப்பு அதிகாரியாக சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் சிபிசிஐடி அலுலகத்தில் விருதுநகர் டிஎஸ்பி அர்ச்சனா, வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினியிடம் நேற்று ஒப்படைத்தார். சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்து, கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி, வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதையும், கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகள், மெடிக்கல் குடோன்களில் உள்ள கணினி, செல்போன்கள், லேப்டாப்களில் உள்ள ஆபாச பதிவுகளை ஆய்வு செய்து, யார், யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது, இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதா என்று பரிசீலித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.