ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காரை கூட்ரோடு அருகே அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது. இங்கு 47 மாணர்வகள் தங்கியுள்ளனர். இங்கு உடற்கல்வி ஆசிரியராக அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(46) பணியாற்றி வருகிறார். இவர், அந்த இல்லத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த மாணவர்கள், இல்ல கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று மாலை புகார் செய்தார். போலீசார் மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அதில், செந்தில்குமார் பள்ளி மாணவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
ஹெச்.எம். கைது: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பூஞ்சோலை அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி (53), இவர் நேற்று முன்தினம் போதையில், 5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்படி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் தலைமை ஆசிரியர் முத்துசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.