×

ரூ.100 கோடி நில அபகரிப்பில் விஜயபாஸ்கருக்கு உடந்தை சென்னை வழக்கறிஞர் கைது

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை வழக்கறிஞரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் பிரவீன் (28) ஆகியோர் கேரளா மாநிலம் திருச்சூரில் கடந்த 16ம்தேதி சிபிசிஐடி தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே எம்.ஆர்.விஜபாஸ்கருக்கு உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் போலி ஆவணங்களை தயார் செய்ய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞர் சார்லியை விசாரிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் கடந்த 24ம் தேதி சென்னையில் இருந்து கரூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் கரூர் தின்னப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 9 மணி முதல் இரவு 11மணி வரை சார்லியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கரூர் கிளை சிறையில் சார்லி அடைக்கப்பட்டார்.

The post ரூ.100 கோடி நில அபகரிப்பில் விஜயபாஸ்கருக்கு உடந்தை சென்னை வழக்கறிஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,Chennai ,Karur ,CBCID ,minister ,Prakash ,Wangal Kuppichipalayam, Karur ,Dinakaran ,
× RELATED எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 10 நாள் நீதிமன்ற காவல்