×

இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் திட்டத்தின் மூலம் 33,000 குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை, மார்ச் 22: இன்னுயிர் காப்போம்-நம்மைக் காப்போம் திட்டத்தின் மூலம் 33 ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேரவையில் கேள்வி நேரத்தின் போது சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் பேசுகையில், ‘‘தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா” என்றார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதே, நான் பலமுறை இந்த சாலை விபத்துகளைப் பற்றி, அதனுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றிக் கவலையுற்று உரையாற்றியிருக்கிறேன். ஆகவே, அதை மனதிலே வைத்து நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், “சாலைகளில் மக்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்திட வேண்டும்” என்பதை இந்த அரசினுடைய முதன்மையான இலக்காக அமைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக என்னுடைய தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் ஒன்றினை கடந்த 18-11-2021 அன்று கூட்டி ஆலோசித்து, “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. “சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கும் அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கக்கூடிய இலவச சிகிச்சை, சாலைப் பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், இன்னுயிர் காப்போம்-உதவி செய்” என்ற ஐந்து அம்ச திட்டமாக அது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நானே கடந்த 18-12-2021 அன்று மேல்மருவத்தூர் சென்று “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காப்போம் 48” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன்.  அன்று முதல் இத்திட்டம் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு சாலைகளில் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான அனைத்து சூழல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்மூலம் விபத்துகளில் சிக்குவோருடைய உயிர் காப்பாற்றப்படுகிறது. 18-12-2021 முதல் 18-3-2022 வரை அரசு மருத்துவமனைகளில் 29,142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும், ஆக மொத்தம் 33,247 பேர் இந்த “48 மணி நேர இலவச” சிகிச்சையை பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு சிகிச்சை பெற்றார்கள் என்பதைவிட, 33 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டம் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் இந்த திட்டத்திற்காக இதுவரை ₹29.56 கோடி செலவிடப்பட்டிருக்கிறது என்பதையும், இத்திட்டம் மேலும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு, அரசு இனி வரும் காலங்களிலும் தீவிரமாக செயல்படும். சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hoursக்குள் மருத்துவமனைக்கு கொண்டுவந்து அனுமதித்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேய பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : MK Stalin , 33,000 families have been saved through the Save the Life-Save Us program: Chief MK Stalin's information
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...