×

மதுரை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் 295 அதிநவீன கேமராக்கள்: விபத்தை தடுக்க `என்ஹெச்ஏஐ’ நடவடிக்கை

நெல்லை: விபத்தை தடுப்பதற்காக மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள 245 கிலோ மீட்டர் தூர 4 வழிச்சாலையில் அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன. வேகமாக செல்லும் வாகனங்களை அடுத்த சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் நாள் தவறாமல் சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. விபத்துக்களை தடுக்கவும், பயண நேரத்தை சேமிக்கவும் பெரும்பாலான நகரங்களுக்கு இடையே 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 6 வழிச்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளிலும் பெரிய, சிறிய விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே ஒவ்ெவாரு ஆண்டும் அதிக விபத்துக்கள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் 4 வழிச்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க என்ஹெச்ஏஐ சார்பில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி மதுரையில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் 4 வழிச்சாலையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. மதுரை-கன்னியாகுமரி இடையே மொத்தம் உள்ள 245 கிலோ மீட்டர் சாலையில் 295 கேமராக்கள் சென்டர் மீடியன் மற்றும் முக்கிய பகுதிகளில் அமைக்கப்படும். சாலையின் குறுக்கே அமைக்கப்படும் உயரமான வளைவுகளின் மையப்பகுதிகளிலும் பொருத்தப்படும். இந்த கேமராவில் இச்சாலைகளில் உள்ள டிராக்குகளில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 80 கிலோ மீட்டர், 100 கிலோ மீட்டர் உள்ளிட்ட வேக அளவுகளை தாண்டி மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களின் பதிவு எண், கடந்து செல்லும் வேகத்தின் அளவு உள்ளிட்டவைகளை பதிவு செய்து எந்த இடத்தை எந்த நேரத்தில் கடந்துள்ளது என்ற விவரங்களை துல்லியமாக போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் மண்டல போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் அந்த வாகனம் மடக்கிப்பிடிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

295 அதிநவீன டிஜிட்டல் கேமராக்கள்தவிர மேலும் 153 கேமராக்களும் வாகன போக்குவரத்தையும் சோதனை சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகளையும், சாலையில் பிரேக்டவுன் ஆகி நிற்கும் வாகனங்களையும் பதிவு செய்யும். இங்கிருந்து நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனம் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும். 16 இடங்களில் அமைக்கப்படும் டிஜிட்டல் போர்டிலும் ஸ்பீடு டிஜிட்டல் கேமரா அதிவேக வாகனத்தை பதிவு செய்து டிஜிட்டல் திரையில் நேரடியாக காட்டும் வகையில் செயல்படும். இந்த டிஜிட்டல் கேமரா பதிவு மூலம் எந்த நேரத்தில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. எங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது, தடைபட்டுள்ளது என்பதையும் உடனடியாக கண்டறிந்து சீரமைப்பு நடவடிக்கை எடுக்க உதவும். மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து நடைமுறைகளின்படி அமைக்கப்படும் இந்த கேமரா செயல்பாடு அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர உள்ளது.

Tags : Madurai ,Kaniakumari , 295 state-of-the-art cameras on the Madurai-Kanyakumari 4 route: NHAI measures to prevent accidents
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...