தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதியில் போதைப்பொருள் கலந்த ஐஸ் தயாரித்து விற்பனை செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வடசென்னையில் பகுதியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் கலந்த ஐஸ் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (26), ராயபுரம் அர்த்தன் தூண் சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் (28), தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த நாகூர் அனிபா (39), பெரம்பூர் தில்லை நகரை சேர்ந்த ஷேக் முகமது (53), ஆகிய 4 பேர், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் கலந்த ஐஸ் தயாரித்து, விற்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஐஸ் தயாரிக்கும் கருவி மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் 4 பேரும், போலீசாரிடம் சிக்காமல் போதைப்பொருள் விற்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, வீட்டிலேயே போதைப்பொருள் கலந்து ஐஸ் தயாரித்து வடசென்னையில் பல இடங்களில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.இதில், கைதான மணிகண்டனின் தந்தை சரவணன், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.