காபூல்: ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியான முறையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரில் இதுவரை உக்ரைனைச் சேர்ந்த 137 பேர் ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்துள்ளனர். இதனால், ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து அனைத்து உலக நாடுகளும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உக்ரைன் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். இரு தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வன்முறை சூழ்நிலைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளனர்.