சென்னை: ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை யொட்டி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, சிறப்பு மலரையும் வெளியிட்டனர். அதன் பிரதியை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து, அதிமுக கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினர்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் கலைப்புனிதன் எழுதிய ``அம்மாவின் அகிலம் போற்றும் பெண்கள் நலத் திட்டங்கள்’’ என்ற நூலினை ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டனர். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் தயார் செய்யப்பட்ட 74 கிலோ கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து, தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டின் பேரில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.