வருசநாடு : தங்கம்மாள்புரம் அருகே, கரடு, அரசு பள்ளிக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.கடமலைமயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் தங்கம்மாள்புரம் அருகே வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் கரடு முரடாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.
மேலும் டூவீலர்களில் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் நலன் கருதி தார்ச்சாலை அமைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.