பெங்களூரு: தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யும்படி, கர்நாடகா சட்டப்பேரவை, சட்டமேலவையில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது, ‘நாடு முழுவதும் விரைவில் காவிமயமாகும். பின் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடிக்கு பதிலாக காவி கொடி ஏற்றப்படும்,’ என்று கூறியதாக மீடியாக்களின் செய்தி வெளியாகியது. இதன் மீது விவாதம் நடத்த அனுமதிக்கும்படி காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை மற்றும் மேலவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார். இதை சபாநாயகர் மறுத்தும் கேட்காமல், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஏற்காமல், அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக பேசினார். இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
தேசியக்கொடியை அவமதித்துள்ள ஈஸ்வரப்பா தேசத் துரோகி, அவர் அமைச்சராக இருக்க துளியும் தகுதியில்லாதவர் என்று டி.கே.சிவகுமார் கடுமையான வார்த்தைகளால் குற்றம்சாட்டினார். இதனால், பாஜ உறுப்பினர்கள் காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தேசிய கொடியுடன் அவையில் போராட்டம் நடத்தினர். இதனால், அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதே பிரச்னையை மேலவையில் எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத் கொண்டு வந்தார். அங்கும் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.