கான்பூர்: ‘முத்தலாக் தடை சட்டம், ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள்
குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றி உள்ளது’ உபி
சட்டப்பேரவை பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். உத்தரப்பிரதேச
மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாவது கட்ட சட்டபேரவை தேர்தல் முடிந்த உள்ள
நிலையில் இன்னும் 5 கட்ட தேர்தல் நடக்க வேண்டி உள்ளது. இந்நிலையில்,
கான்பூர் தேஹாத் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
நேற்று பேசுகையில், ‘‘முதல், இரண்டாவது கட்ட வாக்குபதிவில் ஏராளமானோர்
ஆர்வத்துடன் வாக்களித்ததை பார்க்கையில், பாஜ மீண்டும் ஆட்சிக்கு வரும்
என்று உறுதியாகிறது.
அதிகளவில் வாக்குபதிவு நடந்துள்ளதால், யோகி
ஆதித்யநாத் அரசு மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். முஸ்லிம்
சகோதரிகள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியே வந்து எனக்கு ஆசிர்வாதம்
தந்துள்ளனர். யோகி ஆட்சியில் இம்மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு
கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் போது தொல்லை
தருபவர்களிடமிருந்து முஸ்லிம் பெண்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். முத்தலாக்
தடை சட்டத்தால் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள்
பாதுகாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பெண்கள் குடும்பத்திலிருந்து
பிரிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி ஆட்சியில் கொள்ளை
அடிப்பதற்காக தங்களுடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு இடங்களை
பிரித்து கொடுத்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி
அமைத்து அக்கட்சி போட்டியிடுகிறது. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை
மாற்றும் அக்கட்சியால் மக்களுக்கு எப்படி உண்மையாக பணியாற்ற முடியும்.
மார்ச் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி அதில், பாஜ அமோக வெற்றி
பெற்று ஆட்சி அமைக்கும். எனவே உபி.யில் 10 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது
மார்ச் 10ம் தேதியே ஹோலி தொடங்கி விடும்’’ என்றார்.