×

இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு; தலைவர்கள் தீவிர பிரசாரம்

டெல்லி: இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் வரும் 25ம் தேதி 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனால் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 5 கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவுகளில் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம், 65.68 சதவீதம், 69.16 சதவீதம், 60.09 சதவீத அடிப்படையில் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதாவது பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில் அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் 4ம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேற்கண்ட 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுடன் அனந்த்நாக் – ரஜோரி தொகுதியைச் சேர்ந்த 20 வேட்பாளர்களும் அடங்குவர். அதிகபட்சமாக அரியானாவில் 223 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் 20 வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும், பாஜக மற்றும் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் புதுடெல்லியில் மறைந்த ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் (பாஜக) – ஆம்ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பார்தி, வடகிழக்கு டெல்லியில் மனோஜ் திவாரி (பாஜக) – கன்ஹையா குமார் (காங்கிரஸ்), உத்தரபிரதேச மாநிலத்தில் சுல்தான்பூரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி (பாஜக), ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரியில் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி (ஜேகேபிடிபி), மேற்குவங்காளத்தில் தம்லுக்கில் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (பாஜக), அரியானாவில் கர்னாலில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் (பாஜக), குருக்ஷேத்ராவில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் (பாஜக), ஒடிசாவில் பூரியில் சம்பித் பத்ரா (பாஜக), சம்பல்பூரில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் (பாஜக) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

6வது கட்டமாக நடக்கும் 58 தொகுதிகளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட தொகுதிகளில் நாளை மறுநாளுடன் (மே 23) தேர்தல் பிரசாரம் ஓய்வதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 6ம் கட்டம் முடிந்தவுடன் வரும் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு 7ம் கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 4ம் தேதி 7 கட்டங்களில் நடத்தப்பட்ட தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

The post இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு; தலைவர்கள் தீவிர பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,6th ,Dinakaran ,
× RELATED டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 6ம் கட்ட...