சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்தது. இதையடுத்து, அதன் நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என்று விளக்கமளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த முறை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் விசாரணையின் அறிக்கை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. அதை சூரப்பாவிற்கு தர இயலாது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, அறிக்கையை வழங்க ஏன் அரசு தயங்குகிறது. வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால்தான் சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பளிக்க முடியும். அறிக்கை வழங்க மறுக்க முடியாது. அறிக்கையை தருமாறு நீதிமன்றத்தாலும் உத்தரவிட முடியும் என்று தெரிவித்தார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டப்பூர்வமான பணி. அரசியலமைப்புச் சட்ட பணி இல்லை என்றார்.
அப்போது, சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதே வேந்தரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வாசிக்கப்படுகிறது.
