அருப்புக்கோட்டை: மனைவி-பாட்டியிடையே தகராறு காரணமாக போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஸ்ரீரங்கபுரத்தை சேர்ந்தவர் மல்லிச்சாமி (35). இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 4 வயதிலும், 2 வயதிலும் மகன்கள் உள்ளனர். பந்தல்குடி காவலர் குடியிருப்பில் மனைவி, மகன்கள் மற்றும் தனது பாட்டியுடன் வசித்து வந்தார். இவரது மனைவிக்கும், பாட்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மல்லிச்சாமி, பணிநிமித்தமாக வத்திராயிருப்பு சென்றுள்ளார். அப்போது மனைவிக்கும், பாட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக வீட்டுக்கு வருமாறு, மனைவி இவரை செல்போனில் அழைத்துள்ளார். இதனால் மல்லிச்சாமி இரவு வீட்டிற்கு வந்தார். மனைவி மற்றும் பாட்டியை சமாதானப்படுத்தி விட்டு தூங்கச் சென்றார். நேற்று காலை அவரை வீட்டில் காணவில்லை. இதனால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் அவர், தொட்டில் கயிறால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். புகாரின் பேரில், பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.