×

புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; வீட்டை எழுதி தரும்படி கேட்டதால் மனைவியை குத்தி கொன்ற கணவன்: காவல் நிலையத்தில் சரண்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் எல்-பிளாக் பகுதியை சேர்ந்தவர் தளபதி (52). வெளிநாட்டில் கப்பலில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா (49). இவர்களது மகன் இளம்பருதி (28), வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் அருண் (26), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் அனிதாவுக்கு (26) திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

சண்முகப்பிரியா மட்டும் சென்னையில் தனியாக வசித்து வந்தார். தளபதி அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக இவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு தளபதி, சண்முகப்பிரியா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சண்முகப்பிரியா, ‘‘உனது பெயரில் உள்ள இந்த வீட்டை எனது பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்றும், உன் குடும்பத்தை சேர்ந்த எந்த உறவினர் வீட்டுக்கும் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தளபதி, உனது அண்ணனிடம் சென்று உனக்கு சேர வேண்டிய சொத்துக்களை வாங்கி வா, என மனைவியிடம் கூறி உள்ளார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த தளபதி, சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், சண்முகப்பிரியாவுக்கு இடது கழுத்து, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்து அலறி துடித்துள்ளார்.

இதையடுத்து தளபதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிய சண்முகப்பிரியாவை மீட்டு, தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சண்முகப்பிரியா இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சண்முகப்பிரியா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தளபதியை தேடிவந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Puthuvannarapettai ,Charan , Agregue Puthuvannarapettai; Esposo mata a puñaladas a esposa por pedir casa: Charan en comisaría
× RELATED எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 4 பேருக்கு...