ஆவடி: ஆவடி முதல் பட்டாபிராம் வரை சிடிஎச் சாலையை ஆக்கிரமித்து மீன், பழம் மற்றும் காய்கறிகள் கடைகள் ஏராளமாக வைத்திருந்தனர். இதன்காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் தினமும் தவித்தனர். மேலும் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதுசம்பந்தமாக சமூகநல ஆர்வலர்களும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்ததுடன் புகார்கள் அனுப்பினர்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின்படி, சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. ஆவடி கோட்ட நெடுஞ்சாலைத்துறையினரும் ஆவடி போக்குவரத்து பிரிவு போலீசாரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆவடி செக் போஸ்ட் முதல் பட்டாபிராம் வரை சிடிஎச் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் மூலம் அகற்றினர். சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட கடைகளை அகற்றினர்.‘’சிடிஎச் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். திருநின்றவூர் வரை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்’’ என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.