விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே களத்தூர் நாகலாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் (வயது 42) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் தலைமறைவானார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகனை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். ஆலை உரிமையாளர் மீது, 4 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டிருந்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (40).
இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை களத்தூர் அருகே நாகலாபுரத்தில் உள்ளது. இங்கு 15 அறைகளில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஜன.1 அன்று பட்டாசு ஆலையின் ஒரு அறையில் உராய்வு காரணமாக வெடி மருந்துகள் பயங்கரசத்தத்துடன் வெடித்து சிதறியதில், 8 அறைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குமார் (38), சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பெரியசாமி (55), பி.பாறைப்பட்டியை சேர்ந்த செல்வம் என்ற வீரக்குமார் (40) மற்றும் முருகேசன் (35) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த 9 பேர் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்கள் மற்றும் படுகாயம் அடைந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியும் வழங்கினார்.