ஆவடி: மாநகர பேருந்தை வழிமறித்து கத்தியால் அடித்து கண்ணாடி உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். ஆவடியில் இருந்து திருவள்ளூருக்கு (தடம் எண். 572) மாநகர பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை டிரைவர் திருவள்ளூர், நேதாஜி தெருவைச் சார்ந்த தனசேகரன் (42) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், பேருந்து ஆவடியை அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி ரவுண்டானா அருகில் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் வழிமறித்து உள்ளனர். அவர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த பட்டாகத்தியால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து உள்ளனர். இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதில் டிரைவர் தனசேகரன் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து டிரைவர் தனசேகரன் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.