சென்னை: தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளை வரும் 12ம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 3வது மற்றும் 4வது வாரம் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் நடைபெறும். வருகிற 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைப்பது உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பிரதமரின் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளை வரும் 12ம் தேதி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.