தாம்பரம்: சென்னை தாம்பரம் அருகே குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி கல்லூரி விடுதியில் தங்கிய 67 மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், நேற்று விடுதியில் தங்கிய மேலும் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் எம்ஐடியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது. இவர்கள் அனைவரையும் விடுதியில் தனிமைப்படுத்தி, மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோல், தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்றைய பரிசோதனை முடிவில், மேலும் 7 பேருக்கு நோய்தொற்று உறுதியானது. இதையடுத்து, நேற்றுவரை எம்ஐடி, எம்சிசி கல்லூரிகளில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இதில் 66 பேர் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது.