பெரம்பலூர்: பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை துவங்க உள்ளது. இதையொட்டி, பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன் (45) நேற்று காலை 11 மணியளவில், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். அவருடன், அவரது கார் டிரைவர் ஜான் (36), உதவியாளர் மணிகண்டன் ஆகியோரும் பரிசோதனை செய்து கொண்டனர். மதியம் 1 மணியளவில் பரிசோதனை முடிவு வந்தது. இதில் எம்எல்ஏ பிரபாகரன், அவரது கார் டிரைவர், உதவியாளர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிரபாகரன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
மற்ற 2 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டனர். திருச்சி துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி (என்ஐடி) உள்ளது. இங்கு சமீபத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. கடந்த 30, 31ம் தேதிகளில் வெளியூர்களில் இருந்து வந்த கல்லூரி மாணவர்கள் 527 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இங்கு படிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 5 மாணவர்கள், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 3 மாணவர்கள், தெலுங்கானா, குஜராத்தை சேர்ந்த தலா ஒரு மாணவர் என 10 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.