×

கலவர சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும், மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை : ப. சிதம்பரம் சாடல்!

சென்னை : மணிப்பூர் கலவர சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு கடந்த பிறகும் அம்மாநிலத்திற்கு செல்ல பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மணிப்பூர் கலவரத்தில் 219 பேர் கொல்லப்பட்டதையும் 60,000 பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் வாழ்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஏராளமான வீடுகள், கோவில்கள், தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் மணிப்பூர் தற்போது 2 பகுதிகளாக பிரிந்து கிடப்பதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினருக்காக 2 வெவ்வேறு நிர்வாகங்கள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். மணிப்பூரை பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசு ஒப்புக்கு ஆட்சி செய்வதாகவும் அரசின் அதிகாரம் மெய்தி சமூகத்தினர் வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கிற்கு அப்பால் செல்லுபடியாகவில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மணிப்பூர் மீது கவனம் செலுத்தவோ அல்லது அங்கு அமைதியை கொண்டு வரவோ தொடர்ந்து மறுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 355வது பிரிவு முடங்கி உள்ளதாகவும் 356வது பிரிவு துருப்பிடித்து வருவதாகவும் கூறியுள்ள ப.சிதம்பரம், திறமையற்ற, மதிப்பு இழந்த பாஜக அரசு பெருமை வாய்ந்த வரலாற்றைக் கொண்டு இந்தியாவை ஆழ்வதாக விமர்சித்துள்ளார். பாஜக ஆட்சியில் மணிப்பூர் மாநில மக்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாகி வருவதாகவும் அம்மாநில மக்களுக்காக வருந்துவதாகவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

The post கலவர சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும், மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை : ப. சிதம்பரம் சாடல்! appeared first on Dinakaran.

Tags : Manipur ,p. ,Chidambaram ,Sadal ,Chennai ,Former Union Minister ,P. Chidambaram ,Modi ,Manipur riots ,Chidambaram Chant ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்