சென்னை: தமிழகம் முழுவதும் 17வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் 17வது கட்ட மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; தடுப்பூசி போடாத அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 15 வயது கடந்த மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார். மாநிலம் முழுவதும் 86.22% மக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
58.82% மக்களுக்கு 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். சென்னையில் மீனவ மக்கள் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். சென்னையில் உள்ள கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்க பணிகள் நடைபெறுகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
ஜன.10 முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி முறையாக தொடங்கி வைக்கப்படும். முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போடுவது மட்டுமே இந்த பேரிடரில் இருந்து மீள ஒரே வழி. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. சுனாமி அலைக்கு இணையாக உலகை ஆட்டுவித்து வருகிறது. தமிழகத்தில் விரைவில் virtual மருத்துவ சிகிக்சை அளிக்கப்படும்.
ஒமிக்ரான் பரவிய பலருக்கும் குறைந்த பாதிப்போடு இருப்பதால் சிகிக்சை முறை மாற்றி அமைக்கப்படும். ஈச்சம்பாக்கம், மஞ்சம்பாக்கத்தில் 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.