சென்னை: கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு கலைமாமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். மேலும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படும்.தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளை படைத்தும் பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களிடம் இருந்து ‘இலக்கிய மாமணி’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்காக தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் விருது விண்ணப்ப படிவம் என்ற பகுதியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள், தன்விவர குறிப்புகளுடன் 2 புகைப்படம், எழுதிய நூல்களின் பெயர் பட்டியல் மற்றும் அந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 8 என்ற முகவரிக்கு வருகிற 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பம் மற்றும் பிற இணைப்புகள் மட்டும் tamilvalarchithurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.