×

சென்னையில் தொடர்ந்து மழை கொட்டியதால் செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு: செங்குன்றம் ஏரியில் இருந்து 750 கன அடி வெளியேற்றம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 ஏரிகளில் 11.75 டிஎம்சி மொத்த கொள்ளளவில் 11 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதில், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3451 கன அடி நீர் இருப்பு உள்ளது. அதாவது 24 அடியில் 23.27 அடி உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்வரத்து குறைந்த நிலையில் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், நேற்று காலை 11 மணி முதல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இந்த மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் இருந்தது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2000 கன அடி நீர் வரத்து இருந்தது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று மாலை 6 மணியளவில் வினாடிக்கு 1000 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டன. அதே போன்று  3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செங்குன்றம் ஏரியில் 3174 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.20 அடியில்  20.73 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 2000 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் வினாடிக்கு 750 கன அடி வீதம் உபரி  நீர் திறக்கப்பட்டன. தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ப உபரி நீர் திறப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Sembarambakkam ,Chennai ,Chenkunram Lake , Thousands of cubic feet per second excess water released from Sembarambakkam due to continuous rains in Chennai: 750 cubic feet discharge from Chenkunram Lake
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...