புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்தது. நேற்று புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 10 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே புதுச்சேரி ராஜா தியேட்டர் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர், லாஸ்பேட்டையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோர் கடந்த 7ம் தேதி கொரோனாவால் பாதித்திருந்தனர். சிகிச்சை முடிந்து நலம்பெற்று வீடு திரும்பினர்.
இவர்கள் உட்பட 20 பேரின் ரத்தம், உமிழ்நீர் மாதிரிகள் பெங்களூருக்கு ஒமிக்ரான் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று மதியம் வந்தது. இதில் இருவருக்கும் ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீடு திரும்பியிருந்த 2 பேரையும் தேடி, சுகாதாரத்துறை மருத்துவக்குழு அவர்களின் வீடுகளுக்கு விரைந்துள்ளது. அவர்கள் இருவர் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்களையும் பரிசோதிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறுகையில், புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட மாதிரியின் முடிவுகள் இப்போது கிடைத்துள்ளது. இது சமூக பரவலாக தான் உள்ளது. இதனால் புதுவையில் அதிகம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்றார்.